Sunday, November 27, 2011

ஒரு நாள் Guest !


பின் வாசல் கதவைத் திறந்தவுடன் துவைக்கும் கல் அருகில் சின்னதாக பாம்பு ஒன்று இருந்தது. அது மிகவும் குட்டியாக இருந்ததால் அது குட்டிப் பாம்பா அல்லது அந்தப் பாம்பு வகையே சின்னதாக இருக்குமா என்று தெரியவில்லை. படம் எடுப்பது போல தலையை வேறு தூக்கியது. ஏதேனும்
விஷப்பாம்புக் குட்டியாக இருக்குமோ என்று யோசித்தாலும் மிக அழகாக இருந்ததால் சுசியைக் கூப்பிட்டேன். "கொஞ்ச நேரம் பார்த்துக்கோ (?? "வடகமா காயப்போட்டுருக்க பாத்துக்கிறதுக்கு" னு அவளும் திட்டாமல் "ஐ அழகா இருக்கு எப்படிக் கண்டுபிடிச்ச?" எனக் கேட்டு விட்டு சிரத்தையுடன் அதற்கருகில் குனிந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்) வரேன் என சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடினேன். ஒரு பெரிய ஜாரையும் அதை மூடுவதற்கு எதற்கும் இருக்கட்டும் என ஒரு வலைத் துணியையும் எடுத்துக் கொண்டு வந்தேன். வெகு சுலபமாக ஜாருக்குள் போட்டு வலைத் துணியால் ஜாரின் வாயை மூடி விட்டோம். கொஞ்சம் ஸ்நாக்ஸ் ஆக எறும்பு சிலந்தி எனப் போட்டு வைத்தோம். அப்புறம் அன்று மாலை வரை வைத்திருந்து அது என்ன வகைப் பாம்பு என்றெல்லாம் கூகிளில் அலசி ஆராய்ந்துவிட்டு நிலா நித்திலா பள்ளியில் இருந்து வந்தபின் அவர்களும் பெருமையாகப் புகைப்படங்கள் எல்லாம் எடுத்து ஆராய்ச்சி செய்த பின் வெளியே கொண்டு போய் விட்டு விட்டோம். சந்தோஷமாக ஓடிவிட்டது.

நந்தா

Monday, October 10, 2011

Wednesday, September 7, 2011

கொடுமைடா!

இன்று மதியம் தெரியாத நம்பரில் இருந்து ஒரு call வந்தது. ஆண் குரலா பெண் குரலா என சரியாகப் புரியவில்லை.
குரல்: ஹலோ
நான் : ஹலோ
குரல்: ஹலோஓ
நான்: சொல்லுங்க
குரல்:நீங்க ஸ்வேதாவா?
நான்: இல்லீங்க
குரல்: சாரி வச்சுடுங்க.

ஒரு 30 செகண்டுக்குள் அதே நம்பரில் இருந்து ஒரு SMS வந்தது. "பொய் சொல்லாத" என எழுதியிருந்தது.
அடக் கொடுமையே இது என்ன புதுத் தலை வலி நான் ஸ்வேதா இல்லனு எனக்கா தெரியாது.. னு நினைச்சுட்டு இருக்கப்போவே இன்னொரு தடவை அதே நம்பரில் இருந்து call வந்தது. எடுத்தேன்.

குரல்: நீங்க ஸ்வேதா இல்லைல?
நான்: இல்லீங்க(பாவம்ங்க நான்)
குரல்: இனி நீயாவே கூப்பிட்டு பேசுனாலும் நான் பேசமாட்டேன். காலேஜிலயும் பேசமாட்டேன் போ.
இப்படிச் சொல்லிட்டு வச்சுட்டாங்க. நான் எதுக்கு கூப்பிட போறேன்? எந்த காலேஜுக்குப் போகப் போறேன்? யார்கிட்ட போயி பேசப் போறேன்? கொடுமைடா.

நந்தா.

Wednesday, March 30, 2011

சுசிக்குப் பிடித்த கிரிக்கெட் மேட்ச்.

இன்று சுசி வேகமாகக் கல்லூரியில் இருந்து வந்துவிட்டாள். இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சுக்காக விரைவில் வந்து விட்டதாகச் சொன்னாள். ஹாலில் அட்டகாசமாக படுக்கை விரித்து தலையணைகளை அடுக்கி சாய்ந்துகொள்ள வசதி செய்து கொண்டாள். தண்ணீர் ஸ்நாக்ஸ் எல்லாம் கொண்டு வந்து அருகில் வைத்துக் கொண்டாள். யார் என்ன வேலை சொன்னாலும் செய்யமாட்டேன் என அறிவித்து விட்டாள். தேசிய கீதம் பாடிய போது சின்சியராக எழுந்து நின்று பாடினாள். அப்புறம் மூன்று மணி நேரம் கண்ணைத் திறந்து கூடப் பார்க்காமல் டிவி முன் தூங்கிவிட்டாள்.

நந்தா

Sunday, December 5, 2010

கொலு 2010



2010 நவம்பர்

Thursday, August 12, 2010

முட்டை ஓட்டுக் கோழிக்குஞ்சு

படத்தில் நித்திலா செய்த கோழிக்குஞ்சு



முட்டையை ஒரு ஓரத்தில் சிறியதாக துளையிட்டு உடைத்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டுக் கொள்ளவும். முட்டை ஓட்டைக்கழுவி பெயிண்ட்டையும் குழந்தைகளிடம் கொடுத்துவிட்டால் அவர்களது கை வண்ணத்தையும் கற்பனை வளத்தையும் கண்டு மகிழலாம்.

நந்தா.

பாய்மரக்கப்பல்

நித்திலா செய்த கப்பல்




1) ஒரு தேங்காய் சிரட்டை/ஓடு ஒன்றின் வெளிப்பாகத்தைக் கத்தியை உபயோகித்து வழவழப்பாக ஆக்கவும்.
2) காகிதத்தில் ஒரு பாய்மரம் போல வரைந்து வெட்டி எடுத்துக் கொண்டு அதனை ஒரு குச்சியில் ஒட்டவும்
3) காகிதங்களை சதுரமாகக் கத்தரித்துக் கொண்டு 3 அல்லது 4 சுருள்கள் செய்து அவற்றை இணைத்து ஒட்டிக் கொள்ளவும். அதன் நீளம் சரியாக தேங்காய் ஓட்டுக்குள் குறுக்காக வைக்கும் அளவில் இருக்க வேண்டும்.
4) இப்போது தேங்காய் ஓட்டினுள் குறுக்காக காகிதச் சுருளை பசை கொண்டு ஒட்டி அதில் பாய்மரத்தைச் செருகவும்.
இப்போது நீரில் விட்டு நாம் பயணம் செய்யலாம்.

நந்தா